Saturday, January 29, 2022










 அத்தியாம் - 1

 தாலாட்டு மற்றும் பாடல்களும் விளக்கமும்

ஆர் ஆர் ஆரிவரோ

கண்ணே உறங்கம்மா

கண்மணியே கண் உறங்கு

பொன்னே உறங்கம்மா 

பூமகளே கண் உறங்கு

சிவனருளால் வந்து உதித்த 

செல்வமே கண் உறங்கு 

ஆழ் கடலில் கண்டு எடுத்த

ஆணி முத்தும் நீ தானே

கண்ணே உறங்கம்மா

கண்மணியே கண் உறங்கு

தங்கத்தால் தொட்டில் கட்டி 

வைரத்தால் பூ இழைத்து 

தொட்டிலில் போட்டு உன்னை 

நிம்மதியாய் உறங்க வைப்பேன் 

கண்ணே உறங்கம்மா

கண்மணியே கண் உறங்கு


மற்றொன்று இப்படியும் உள்ளது

ஆர் ஆர் ஆரிவரோ

கண்மணியே கண் உறங்கு 

யார் அடித்து நீ அழுதாய் 

அடித்தாரை சொல்லி அழு

அப்பா உன்னை அடித்தாரோ 

அனைத்து எடுக்கும் கையாலே

மாமன் உன்னை அடித்தாரோ

மரம்பிஞ்சுத் தடியாலே

அத்தை உன்னை அடித்தாரோ

அலரி பூ செண்டாலே

ஏன் அழறாய் என் மகளே

கண்ணே உறங்கம்மா

கண்மணியே கண் உறங்கு

பாலுக்கு நீ அழுதாயோ 

பசியாற குடித்து  விடு

ஏன் அழுதாய் என் மகளே

கண்ணே உறங்கம்மா

கண்மணியே கண் உறங்கு

அப்பாவின் தோள் மேலும் 

அம்மாவின் மடி மேலும் 

கண்ணே உறங்கம்மா

கண்மணியே கண் உறங்கு

 இவை இரண்டும் தாலாட்டு பாடல்கள்.இந்த பாடல் குழந்தை பூமியில் பிறந்து சில நாட்களின் பின் தாயாராலோ பேத்தியாராலோ (பாட்டி)பாடப்படுகிறது.பாட்டை கவனமாக பாருங்கள். ஆர் ஆர் ஆரிவரோ என்றே தொடங்கப்படுகிறது.குழந்தை ஆணாக இருந்தால் கண்ணா,ஐயா என்றோ, பெண்ணாக இருந்தால் கண்ணே அ்அம்மா என்றோ பாடுவார்கள். இந்த பாட்டு தொடங்கபடும்  வார்த்தையில் பாரிய அர்த்தம் உள்ளது. தமிழ் மக்கள் பிறவிகளை நம்புபவர்கள். தாயார் பாமரப் பெண்ணாயிருந்தாலும் சரி, படித்த பெண்ணாயிருந்தாலும் சரி பிறந்த பிள்ளையை தாலாட்டு பாடித்தூங்க வைக்கும் போது ஆர் ஆராரோ ஆரிவரோ என்று சொல்லியே பாட்டைத் தொடங்குவாள்.

            அவளுக்கு அதன் அர்த்தமே புரிந்து இருக்குமோ இல்லையோ தெரியாது.  ஆனால் அந்த தாயானவள் மாபெரும் பாடத்தைத் தன் குழந்தைச் செல்வத்திற்கு சொல்லி கொடுக்கிறாள். யார் யாரோ? யார்  இவரோ? என்று இரு கேள்விகளையும் குழந்தையைக் கையில் எடுத்து கேட்கிறாள்.பக்கத்தில் இருப்பவருக்கும் பதில் தெரியாது. கடவுளுக்குதான் தெரிந்திருக்கும். 

        எனவே கையில் எடுத்தவுடன்  கடவுளிடம் கேட்டு அதனைத் தன் கணமணி ஆக்கி கொள்கிறாள் . குழந்தையிடம்’  நிம்மதியாய்  கண் உறங்கு’ என்று இனிய குரலில் மென்மையாக பாடுகிறாள்.குழந்தை தாயின் அரவனைப்போடு குரலோசையும் சேர்ந்து கொள்ள நிம்மதியாய் நித்திரை செய்யப்பார்க்கின்றது. முதல் பாட்டில் குழந்தையை தாலாட்டும் விதம் பாருங்கள்! உயர்வு நவர்ச்சி அணியால் போற்றுவதை!! ‘பொன்னே உறங்கம்மா, பூமகளே நீ உறங்கு’ என்று பாடும் பொழுது,பொன்னை ஒத்தவளே பூவை ஒத்த மகளே என்று கூறுவதை, அடுத்த வரியில் சிவனருளாள் வந்த செல்வமே எனக் கூறி சிவனிடம் தன் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறாள்.இந்த நன்றி தெரிவிக்கும் பண்பு தமிழரிடம் பாரம்பரியமாய் உள்ள பண்பாகும். 

        தைப்பொங்கல் தினத்தன்று விநாயகர் சூரியன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாய் பொங்கி படைத்து விழாக் கொண்டாடுவார்கள். நவராத்திரி விழா எடுத்து முப்பெரும் தேவிகளுக்கு கல்வி செல்வம் வீரம் தந்ததிற்காய் நன்றி தெரிவிப்பர்.அதே போன்று தலாட்டு பாடும் பொழுதும் சிவனருளால் வந்த செல்வம் என்று கூறி நன்றியை தெரிவிக்கிறாள். அதன் பின் அவள் கற்பனை விரிவடைகிறது. ஆழ்கடலில் கண்டு எடுத்த பழமை பொருந்திய முத்தோ என்கிறாள். உனக்கு தங்கத்தால் தொட்டில் கட்டி அதில் வைரப்பூ இழைத்து ,உன்னை தொட்டிலில் இட்டு உறங்க வைப்பேன் என்று தன் செல்வச் செழுமைகளை கூறுகிறாள் .இவற்றை ஒரு செல்வசீமாட்டி சொல்லி உறங்க வைக்க, இன்னொரு பாசமிகு மங்கை தன் உறவுகளை சொல்லி உறங்க வைக்கிறாள். எப்படி என்று பார்ப்போமா?

        இந்த்த் தாயார்   ‘ ஆர் ஆர் ஆரிவரோ கண்மணியே கண் உறங்கு’ என்று பாடி விட்டு யார் அடித்து நீ அழறாய். அடித்தாரைச் சொல்லியழு என்று பாடிக் கேட்கிறாள். அ்அப்பா அடித்து விட்டாரா அணைத்தெடுக்கும் கையாலே என்று கேட்டுப் பின் மாமன் அடித்தாரோ மாப் பிஞ்சுத்தடியாலே என்று கேட்கிறாள் . தனது அருமை அண்ணன் உனது மாமன் உன்னை அடித்துவிட்டாரோ? அவர் அடித்தது பிஞ்சுத்தடி தான் என்று தன் செல்வத்திற்கு மறைமுகமாய், அது மெல்லிய தடி என்பதால் உனக்கு அது நோகாது.ஆகவே கவலைபடாதே என்பதை’ மாம்பிஞ்சுத்தடி’ என்று கூறுவதில் இருந்தே குழந்தையை புரிந்து கொள்ள வைக்கிறாள். அ்அத்தை உனக்கு அலரிப்பூச் செண்டாலே தானே அடித்தா உனக்கு வருத்தம் தராது.இவர்கள் உன்னை திருத்தி நடத்த உரிமை உள்ள உறவுகள் என்பதைப் புரிய வைக்கிறாள். 

        பின்பு குழந்தை பசித்து அழுதோ என எண்ணிப் பாடிக் கேட்கிறாள்.பசியாற பாலைக்குடி என்று சொல்வதோடு உன் அப்பாவின் தோள் மேலும் அம்மாவின் மடி மேலும் நித்திரை கொள். அப்பாவின் தோள் உனக்கே சொந்தம். அதில் உன்னைச்சுமந்து செல்வார். உன் அம்மாவின் மடி உன்னுடைய இருப்பிடம். அவள் உன்னை ஏந்தி வைத்திருப்பார் என்று தமது கடமை உன்னை கண் எனக் கவனிப்பது என்று கூறாமல் கூறி அந்த சிசுவுக்கு நம்பிக்கையை வளர்க்கிறாள். இந்தப் பாடல் மூலம் தாய் தந்தை கடமை, மாமன்  அத்தை கடமை என்று தமிழர் தம் கடமைகளை எவ்வண்ணம் செய்தனர் என்று வகுத்துக் காட்டுகிறார்கள்.

    பாமர தாலாட்டு பாடல் மனித உணர்வினையே தொட்டுவிடுகறது.இதை வழி வழி பாடி  வந்திருக்கிறார்கள் என்றால், தமிழர் மாட்சிமை தான் என்னே! குழந்தையும் தாலாட்டுப் பாடலில்  கண் உறங்கு பாலுண்டு வளர்கிறது. இப்பாடலை இரண்டு வயது மூன்று வயது வரை படிப்பார்கள். குழந்தை பாடலைக் கேட்டவுடன் நித்திரை கொள்வதை வழக்கமாக்கி விடுவதால் தாலாட்டைப் பாடியே தூங்க வைத்து விடுவார்கள்.



Wednesday, January 26, 2022






 முகவுரை 

இந்த பாடல்கள் குழந்தைகள் பிறந்து வளரும் போது பாடப்பட்டன. அநேகமான பாடல்கள் தாயாரால் பாடப்படுவதாகவே கற்பிக்கப்படுகிறது. இந்த தாலாட்டு பாடலானது, எல்லா இனத்தவர்களும் வெவ்வேறு பாணியில் தம் தம் மொழிகளில் எல்லாத் தேசங்களிளும், எல்லா இடங்களிளும் தமக்குத் தெரிந்த அறிவினை வைத்து குழந்தையை தூங்க வைக்கத் தாலாட்டாய் பாடி இருக்கிறார்கள். மற்றைய பாடல்கள் முன்னோர்கள் பாடியதை வழிவழியாகப் பின்னே வந்தவர்கள் பாடிக் குழந்தைகளை மகிழ்வித்துவிளையாட்டு காட்டியதை, அவர்கள் பாடல் மூலம் அறியக்கூடியதாய் இருக்கிறது. குழந்தைகளின் தேகப் பயிற்சியினை பாட்டு பாடிச் செய்ய வைத்தனர்.

                                                    குழந்தைகள் தேகபயிற்சி என்று தெரியாமல், மகிழ்ச்சியோடு விளையாட்டு போல் செய்ய பழைய காலத் தாய்மாரும் அதற்கேற்ப பாட்டுகள் பாடிக் குழந்தைகளை மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்தனர் இந்தப் பாடல்களைப் பாடுகையில் குழந்தைகள் அசைவது, ஆடுவது, வாய்கூட்டுவது, கை ஆட்டுவதைக் கண்டு மனம் மகிழ்ந்து இருக்கிறார்கள்.பழைய அகலப் பெரியோர் குழந்தைகள் சாப்பிட்டு சந்தோஷமாய் இருக்க வேணும் என்று விரும்பினர்.எனவே பாமர மக்களும் பாடக்கூடிய விதமாய் தாலாட்டு பாடல்களும் வேறு சில பாடல்களும் பாடினார்கள்.குழந்தைகள் பாடலின் போது என்னென்ன அபிநயங்களை செய்ய வேண்டுமோ அதைக்காட்டிக் கொடுத்தனர்.குழந்தைகளும் செய்தனர். இது குழந்தைகளின் உடலை வலுவாக்கியது. இரத்த சுற்றோட்டத்தை நன்கு செய்யத்தூண்டியது. தசை நார்களை வலுவாக்கியது.முதுகெலும்பை உறுதியாக்கியது. இந்தப் பாடல்களையும் அதன் விளக்கங்களையும் நாம் சற்று பார்த்திடுவோமா?  

                    

Tuesday, January 25, 2022








 அணிந்துரை 

மக்களின்  தூண்டுதலால் எழுதி 2006 வெளியிட்ட ஆத்மதுளிகள் (108 பாடல்கள்) நூலின்பின் ஞானமனோகரி ஶ்ரீஸ்கந்தராஜா எழுதிய ‘குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும்’ என்னும் நூல் என் பார்வைக்குக் கிட்டியது. இது சிறுவர் இலக்கிய வகையாய் உள்ளது. சிறுவர் இலக்கியப்  பாடல்நூல்கள் பலரும் படைத்துள்ளனர்.புரட்சி கவிஞர் பாரதியார் தொடக்கம் ( ஓடி விளையாடுபாப்பா - ஊரக்கு நல்லது சொல்வேன் - சின்னஞ்சிறு கிளியே) , கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, (முல்லை நறுமலரோ , முருகவிழ்க்கும் தாமரையோ? மல்லிகைப்பூவோ, மருக்கொழுந்தோ,சண்பகமோ?), பாவேந்தர் பாரதிதாசன் (மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்ட வந்த தேனின் பெருக்கே என் செந்தமிழே கண்ணுறங்கு! (ஆண்) அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச் சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே! (பெண்),கவியோகி சுத்தானந்த பாரதியார்(அம்மா நான் விளையாடப் போறேன்  - இலைக்குழல் ஊதிப் பறைகொட்டி நீ - ஓடி வாடா கண்ணா ) தங்கதாத்தா, சோமசுந்தரபுலவர் (ஆடிபிறப்புக்கு - வெய்யிற் கொடுமையம்மா  - பருத்தித்துறை ஊராம் ) , வித்துவான் க. வேந்தனார் (குடைபிடித்து - பாலைக்காட்ய்ச்சி ),அழ. வள்ளியப்பா - கண்ணதாசன் - துரைசிங்கம் - குமாரசாமி - கேணிபித்தன் - கௌரிதாசன்  அவரை - (ஆத்திசூடி அவ்வை உட்பட) இன்னும் பலப்பலர் குழந்தைப்பாடகள் படைத்துள்ளனர்.

               ஆனால் இவை பழைய நாட்டுப்புறப் பாடல்களைத் தேடிபிடித்து(பல செவிநுகர் கனிகள் - வாய்மொழி இலக்கியம்) (வட்/மு.இராமலிங்கம் + முத்துமீரான் தொகுத்தது போல்) 23 அத்தியாயங்களக - 182 பக்கங்கள் வரை முழு விளக்கங்களுடன் எழுதியதோடல்லாமல் , தனியாகப் பாடல்களையும் தந்துள்ளார்.விளக்கங்கள் பாடல்களைப் படிக்க தூண்டுவனவாய் உள்ளன.கதைகள் + விளையாட்டுகள் + நொடிகள் +  புதிர்கள் (கணக்குகள்) யாவும் சிறப்பாய் உள்ளன.கரும்பை நுனியிலிரிந்து உண்பது போல் உள்ளது.கடைசியில் அடிக்கரும்பாய்  கடும் சுவையாய் வேரோடு தின்னலாம் போல் தெரிகிறது.ஆக முடிந்ததுவா? என ஏங்க வைக்கின்றது. இப்படி நூல்கள் வெளிவந்தது குறைவு. இல்லை என்று கூடச் சொல்லலாம்?(நான் கூட சேர்த்த தாமரையில்  பழம் ஊரப்பாடல்களை அழியவிட்டு வருந்துகின்றேன்.) நிலாநிலா -கைவீசம்மா -ஆக்காண்டி போன்றவை சில பாடநூல்களில் வந்திருந்தாலும் கூட இப்படியான விளக்கங்கள் இல்லை.

                      இது ஒரு புதிய முயற்சி. பழமையில் நல்லவற்றை - மங்கள மறைந்தவற்றை  - மறந்துபோனவற்றை - மீண்டும் தூண்டித்துலக்கும் - புதுப்பிக்கும் - நினைவூட்டும் முயற்சி இதற்கு மாணாக்கரும் + ஆசிரியரும் + பெற்றோரும் + கற்றோரும் ஊக்கம் தரவேண்டியது அவசியம்.வீடுகளில் மீண்டும் தொட்டில்கள் ஆட வேண்டும். தாலாட்டு பாடல்கள் பாடப்பட வேண்டும் .இசைத்தமிழ் இன்பத்தேன் வந்து செவிகளில் பாயவேண்டும். இந்நூல் ஆசிரியருக்கு குழந்தை உளவியல் பயிற்சியும் , பாடல் ஆய்வுத்தன்மையும், தாய்மொழி நாட்டுப்பற்றும் இருப்பது இதன் மூலம் தெளிவாகின்றதி.மறைமலை அடிகளார் நூல்கள்( திருக்குறளாராய்ச்சி + வேளாளர் நாகரிகம் போன்ற) மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணார் நூல்கள் (தமிழர் வரலாறு 2 + திருக்குறள் தமிழ் மரபுரை 4) போன்ற தனித்தமிழ் நூல்களையும் கற்று வடமொழிச்சொற்களைப் பெரும்பாலும் நீக்கி ( பச்சைப் பசுந்தமிழ் நாட்டில் - தமிழ் பாய்ந்திட வாழ்வது வாழ்வு - பாவேந்தர்) தமிழாகவே நூலைத்தருமாறும் மிகப்பணிவனபுடன் வேண்டி முடிக்கின்றேன்.   நன்றி - வணக்கம் !

   ‘போற்றுக தாய்மொழியைப் பொன்போல், புறநயங்கண்டு ஏற்றுக நாளும் எழில்!( கவியோகி சுத்தானந்த பாரதியார்) 

                                                                                ‘தாமரைத் தீவான்’