Monday, June 11, 2012

என் உரை
என் உரையை பற்றி எழுத வெளிக்கிட்டேன். இக் கவிதை எழுத்து வடிவில் வர என் புதல்வன் தான் காரணம் என்பேன்.என் சிறுவயதில் கவிதைகள் கட்டுரைகள் எழுதுவது என் பொழுது போக்கு. ஆனால் அவை மேடைக்கு வந்ததில்லை முளைத்து வந்த வேளையிலே கருகிவிடும் தன்னாலே.அதை பார்ப்பாரும் இல்லை. எனக்கு உற்சாகம் தருவாரும் இல்லை. அதனாலேயே முளையிலே கிள்ளி எறியப்பட்ட குருத்துப்போல் எனது லௌகீக கவிதை கதை எல்லாம் அகன்று போனது. நெஞ்சிலே கோர்த்து வரும் சொற்களை கொட்டிட பேனா எழுதுதாள் தேடுவேன்.கிறுக்குவேன் தமிழ்மொழியில்,படித்து பார்ப்பேன் உள் மனதில் ஒரு மௌனப் புன்னகை.பின் அந்த காகித துண்டு கீழே எங்கோ விழுந்து விடும்.இதுவே என் கவிதை எழுத்தழகு.காலங்கள் சென்றது,இல்லறவாழ்க்கை வந்தது.கோலங்கள்  பல போட்டு நின்று வந்தேன் மேடையில் மகளாய் நின்ற நான்,தாரமாகி தாயாகி விதவையாகி வெளிப்பார்வைக்கு குடும்ப வாழ் மாதுவாகி நிற்கின்றேன்.உள்ளே என் குரு நாதர் சுவாமி கெங்காதரானந்த வீற்றிருந்து பாங்குடனே லௌகீக ஆசைகள் தனை களைய உதவி செய்கின்றார்.செயல்பட்டு வருகின்றேன். ஒரு நாள் (14.09.2004)வழமை போல ஒரு கவிதைதனை எழுதினேன். மௌனமாக வாசித்தேன்.நிமிர்ந்து பார்த்தேன்.என் மகன் தொழில் முடித்து வருகின்றான்.நேரமோ ஐந்து மணி வரும் போதே கூறினேன் நான் கவிதை ஒன்றை எழுதியுள்ளேன் கேட்பாயா என்றேன்.வாசியுங்கள் என்று சொன்னான்.வாசித்தேன் அத் தொடரை,மௌனமாய் கேட்டு இருந்தான் பின் முகம் மலர அம்மா இது போல் நூறு கவிதை எழுதுங்கள் நான் அச்சேற்றுகிறேன் என்றான். நிமிர்ந்து அவன் முகம் பார்த்தேன் சொல்லிலே உறுதி முகத்திலே உறுதி இவை கண்ட மாத்திரத்தில் செய்வாயா நீ இதை என்றேன்.நிச்சயமாக செய்வேன் அம்மா எழுதுங்கள் என்று சொன்னான்.அன்றே நான் என் கவிதை ஒன்று மேடைக்கு வர இருக்கிறது என்றும் மகிழ்ச்சியிலே இக் கவிதை தொகுப்பினை படைத்தேன். எனது மகளும் எனக்கு எழுத்துதவி செய்தாள். அவளே கவிதைக்கு தலையங்கமும்  எடுத்து தந்தாள். பிள்ளைகளின் உற்சாகப்படுத்தலினால் வந்திட்ட கவிதை இது.சொற்குற்றம் பொருள் குற்றம் எது தென்படினும் அக் குற்றத்தினை பொறுத்து இதனை வாசித்து மகிழ்ந்திடுக. கற்றோர் மத்தியில் பல்கலைக்கழக படிப்பு படிக்காதவள் நானன்றோ. அதனாலே சொற்குற்றம் பொருள் குற்றம் ஏற்படினும் அக் குற்றத்தை பெரிது படுத்தாது வாசித்தே மகழ்வுறுங்கள். காலவோட்டத்தில் இறைவன் திருவடியை சிந்திக்க முயன்றவள் அந்த இறையை பணிந்து இறையருளாளே கவிதை இயற்றினேன். அவனருளால் எல்லா நலமும் பெறும். இதில் ஒரு பாட்டு தனினும் நல்லது என்று மக்கள் குழாம் கொள்ளுமாயின் எழுதிய பயனுக்காய் மகழ்ந்திடுவேன்.இருந்தாலும் கீதை மொழி செய்திடுக பலனை எதிர்பார்க்காதே என்று சொல்லிடுதே அதனால் எல்லாமே இறை செயல் என்றே இருந்திடுவேன்.
                  வாழ்க வையகம் வளர்க தமிழ் மொழி.
                                                            திருமதி. ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமனோகரி

Saturday, June 9, 2012

                போற்றியே பணிகின்றேன்


போற்றியே                 பணிகின்றேன்
புதுமையே                  செய்தாய்
மாற்றியே                   அமைத்து
இந்த                               வையத்தை
வாழ                               வைத்தாய்
சாற்றியே                    நிற்கும்
இறைநாமம்              தன்னை
எந்தெந்த                     விதத்தில்
எல்லாம்                      கூறவே
வைத்தாய்                  நீயே
ஹரி                               என்று
சொல்வாருண்டு   ஹரன்
என்றும்                        சொல்வாருண்டு
கணபதியே                என்று
கருத்தினில்               பதிப்பாருண்டு
முருகன்                       தான்
வேண்டும்                  என்று
முழுமூச்சாய்          சொல்வாருண்டு
சக்தியே                       தரணியே
காத்திடும்                  பெண்னென்றும்
அவளையே              தொழுவாருண்டு
அம்மதம்                     மாறிநின்று
யேசுவே                      மேரியென்று
ஜகத்தினில்               சொல்வாருண்டு
நபிகளே                       இறைவனென்று
கைதூக்கி                  தொழுவாருண்டு             
 புத்தரே                         இறைவனென்று
புவியிலே                  தொழுவாருண்டு
என்னென்ன              நாமத்திலும்
உம்மையே                காண்கின்றேன்
யாவுமாய்                  ஆகிநின்றாய்
சகலதும்                      நிறைந்து
நின்றாய்                      ஆதியும்
ஆகி                                 நின்றாய்
அந்தமும்                     ஆகி
 நின்றாய்                      சோதியும்
ஆகி                                நிற்கும்
உன்னையே               பணிகின்றேன்.          

Thursday, June 7, 2012

வழி பல இறை ஒன்று
சமயங்கள் என்று கூறின்
மார்க்கமே பொருள் என்பர்
மார்க்கம் என்று சொன்னால்
வழியது ஆகும் அன்றோ
ஓரிடம் ஏகும் போது
வழிகள் பலவாய் இருக்கும்
ஒருவழி பிடித்து நாமும்
அவ்வழி தன்னால் வர
சேரிடம் சேர்வோம் தானே
இதனையே எண்ணி பார்க்கில்
சமயங்கள் பலவாய் இருப்பினும்
இறையை அடைதலே குறியாயின்
அதனையே மனதில் கொண்டு
வெவ்வேறு மார்க்கம் கண்டு
வந்திடும் மக்கள் எல்லாம்
இறைவனை அடையும்போது
ஒருவனே அவனென்று உணர்வாரே.


Wednesday, June 6, 2012

                      சிவனிடம் விண்ணப்பம்
உய்யும் வழி அறியேன் ஐயா
உன் மயமாய் கொண்ட உலகிலேயே
பிறந்து நைய புடை பட்டேன்
நடுவீதியில் நின்று நடுங்கியே வீழ்ந்தேன்
ஐய உள்ளத்தில் நிற்கும் செம்மலே
உனையன்றி வேறு யாரிடம் அழுவேன்
மெய்ய நின்பாதம் சரண் அடைந்து
 உய்தி யாகும் நாள் எந்நாளோ


 
நாள் பெருக்கி ஓடித் திரிந்து
ஆலயம் சுற்றி வழிபட்டு அறியேன்
ஏதிலம் போல் எண்ணியே ஏங்குதே
பாதிச் சுமையும் குறைத்து வெளியேறி
யாரும் அற்ற இடத்திலே இருந்து
ஓதி உணர்ந்து  உன் காலடி
பற்றி ஆடிப் பாடும் நாள்
எந்நாளோ எனக்கு நீ உரைப்பாய்
சென்னிற மேனி கண்டு ஆனந்தித்து
துதி பாடி பொன்னிற மாகமாற
கண்டு நெஞ்சமே ஆனந்தத்தில் விம்மி
உன் அருகே இருந்து தரிசிக்கும்
நாள் என்றோ அறியேன் செம்மலே
அதை நீ எனக்கு உரைப்பாய்
ஆரும் அறியா வண்ணம் எனக்களித்தாய்


உன்னை ஏங்குதே அதை எண்ணியே
கருவி கர்ணங்கள்  எல்லாம் கருத்து
அறியா நிலையில் நின்று இடும்பை
தனை பலசுமந்து பார் அறிய
பணிந்து பயந்து அறிவியென கண்ணீர்
சொரிந்து ஆட்டம் எல்லாம் ஓய்ந்தும்
மழை விட்டும் துவானம் தெறித்த
கதையாய் போனதுவே நான் உன்னுடன்
வாழ்ந்த வாழ்வு பகல் வேஷம்தானா.


இருந்த இடம் என்ன மலர்
சோலை யென்ன இருந்து உனை
ஏற்றி பாடிவந்த வாழ்வென்ன
போற்றியே பதம் நாடி துதித்து
பாடியேற்றியது மாய உலகில் பிறந்து
மண்ணின் சுவையாலே பாவம் செய்தே
கனவாய் கதையாய் போய் யிடவே
வைத்தாயோ என் உள்ளத்தின் இறையே

அகிலம் எங்கும் நின்று ஆடும்
ஆட்டம் என்ன ஒப்புயர் இல்லா
ஜோதி நீ என்மனதில் கருத்துதித்த
அன்றே உயர்வு எல்லாம் தந்து
ஆட்கொண்டு வாழ வைத்தாய்
உன்னை எல்லா இடத்தும் கண்டு
உன் உயர் எல்லாம் போற்றி
பாடும் நாள் எந்நாளோ சித்தனே


அறிவு என்று அறியா அறிவினுள்
அறிவாகி நின்று அறிவு உறுத்தும்
அறிவே நிலை கொண்டு என்னை
நீ அறிய வைத்து பார்க்கும்
நாள் எதுவோ அறியேன்  சொல்
பலமறியா பலத்தை எனக்கு அருளி
பலர் அறியா வண்ணம் வைத்து
அருள் சுரக்கும் இன்னமுது ஆனாயே


திக்குத் தோறும் நின் அருள்
பொழிய வைத்தாய் சிரம் தாழ்த்தி
வணங்கி உனை ஏற்றி பாட
பக்குவமாய் பல காட்சி காட்டி
பாரினில் அருள் சுரக்கும் அருளே
ஊர் அறிய எக்காலம் வந்து
உன் அருளாட்சி தனை தந்து
என்னை ஆண்டு அருள்வாய் தெய்வமே.


முன் செய்த தவப்பயன் என்னை
வந்தே சூழ்ந்து நிலைதடுமாறி நின்றேன்
பின்  செய்த வினைப்பயன் என்னை
வைத்தே வாட்டி மௌனி ஆகுதே
என் செய்வேன் உனை விட்டு
பிரிந்தே திக்கு அறிய தவிக்கின்றேன்
கருணை மா கடலே உன்
அருள் தந்து எப்போ ஏற்றருள்வாய்.


உரை எல்லாம் உரைத்து விட்டேன்
இனி ஒன்றும் என்னிடம் இல்லை
கறியது உதவா கறியாகி போகும்
முன் இலை தனில் பரிமாறி
 பசிதனை ஆற்றி போவது போல
என் நெஞ்சத்துப் புண் ஆற்றி
என்னை ஆண்டு கொள்வாய் அரசே
உன் தாள் வணங்கியே ஏற்றினேன்.