Thursday, May 31, 2012

ஆகாச மனிதன்

ஓடுகின்ற நதியின் ஓடு
மிதந்து வரும் செடி கொடிகள்
யாருமற்ற இடங்களிலே
நதியின் ஓசை தனை
பாடுகின்ற பறவைகட்கு
கேட்டது என்றே மெல்லிசையை
எழுப்பிற்றே. பறந்து வரும்
பறவையினம் பாடிதிரிந்து
வருவதையே ஆகாய மேகங்கள்
ஆனந்த நடனமிட்டு மென்காற்று
இசைக்கு ஏற்ப மெல்லனவே
பறந்ததையே பார்த்தது இங்கே.
மங்கி வரும் ஒளியிலே
மாலைக்காலம் வந்ததென்று
மேச்சல் எல்லாம் முடித்து
கொண்டு வீட்டை நோக்கி
ஆவினங்கள் செல்வதையே மெல்லனவே
சிறகடித்து பறந்து
வரும் பறவையினம்
பாத்திட்டு வருவதை இங்கே
விலங்கினங்கள் நேசமாகப் பார்க்குதுவே
பறவைகளின் ஆனந்தம் தான்
மனிதனுக்கு இருந்துவிட்டால்
மனிதனும் ஆகாச மனிதன் தான்.

Wednesday, May 30, 2012

கோபுர கலசம்

கோபுர கலசம் கோவிலில்
கும்பாபிஷேகம் முடிந்தது இங்கே
ஆலயத்திற்கு கலசம் தேவை
அருள்நின்ற தெய்வம் சுடர்விடுதமனால்


ஆலயம் போன்ற தேகமுமாகும்
அருள்
தரும் நெறிகள் ஓங்கிடவேண்டும்
தவமே அதற்கு  கலசமாகும்
தவநெறியாலே தேகம் உயர்வுறும்


இறைவன் சாநித்தியம் ஓங்கில்
கலசம் மின்னி உயர்வுறுமே
தவமது ஓங்கி உயரரவுறுமாகில்
தேகம் தேஜஸ் ஆகிஒளிர்விடுமே

 
கலசம் ஒளிர்வது ஆலயத்திற்கு அழகு
தவம் ஒளிர்வது தேகத்திற்கு  அழகு
ஆலயத்திலே தெய்வம் அருளும்
தவத்தினாலே ஞானிகள் அருள்வார்.


Monday, May 28, 2012

                      அருள் விருந்து
இலை தனில் பரிமாறி
விருந்து உண்டே கைகழுவி
வெளியேறிய நேரமே சுவையே
சுவைத்தோரிடம் இருந்து களண்டதுவே



மேடையில் பாடிய பாட்டை
கேட்டே மகிழ்வுடன் வெளியேறினோர்
வீட்டை தாள்பாள் நீக்கியபோதே
செவிவழி இன்பம் பறந்ததுவே



அருள்மொழியாலே ஆன்மீகத்தை சுவைத்தோர்
வீட்டினை அடைந்து கடமையிலாழ்ந்தும்
மனதிடையே நிலைத்து நின்றதுவே
அருள்தரும் விருந்து அரமருந்து.

Friday, May 25, 2012

பிறப்பின் ரகசியம்

பிறவியிலே வந்தோர் எல்லாம்
வினைப் யோகம் நுகரவந்தார்
மரணத்தின் வாயில் நுழைந்தோர்
வினைப்போகம் எடுத்து சென்றார்
கடைநிலையின் ஜீவன்முக்தர் சிலரை
எவரென்றும் பலர் அறியார்
கடையவர் தமக்கிது புரிந்திடாது
இதனால் கடயோராய் நின்று
ஏங்கி மரிப்பரே  மண்ணிலேதான்.


Thursday, May 24, 2012

                        ஏற்றிய தீபம்
ஏற்றுகிறேன் தீபம் தன்னை
ஒளியினிலே கவலை நீங்கும்
மீட்டுகிறேன்  வீணை தன்னை
ஒலியினிலே கவலை நீங்கும்

பாடுகிறேன் பாடல் தன்னை
பண்ணிலே கவலை நீங்கும்
உழைக்கின்றேன் கடமையில் நான்
உழைப்பினிலே கவலை நீங்கும்

எழுதுகிறேன் கவிதை தன்னை
சுவைதனிலே கவலை நீங்கும்
இவை கடந்து கவலைப்படின்
கடவுளிடம் சரண் புகுவேன்.

Wednesday, May 23, 2012

                    அன்பின் பெருமை
அன்பு கொண்டு உலகத்தை
பார்க்க வேண்டும் நாமெல்லாம்
இன்பம் அதனால் வந்திடுமே
இருளும் எம்மில் கழன்டிடும்

மக்கள் யாவும் ஒன்றென்போம்
மாநிலம் அதனால் வாழ்ந்திடுமே
கருணை அன்பு கொள்வதினால்
மக்கள் வளமும் பெருகிடுமே


பெரியோர் அதனை சொன்னாரே
செயலில் காட்டி நின்றாரே
உள்ளக் கதவு திறப்பதற்கு
உதவும் செய்கை அதுவன்றோ


சிந்தனை செய்து பாருங்கள்
சீரும் சிறப்பும் பெருகிவிடும்
முன்னோர் அதனை செய்தார்கள்
முழுமையாக வாழ்ந்து வந்தார்கள்


மண்ணில் நாங்கள் பிறந்ததுவே
மகிழ்வாய் இருந்து வாழ்வதற்கே
மற்றோர் தமக்கு உதவியே
மாண்புடன் நாமும் வாழ்ந்திடுவோம்.




Tuesday, May 15, 2012

ஆன்மீக  ராகம்

ஆன்மீக ராகம் நான் பாடுவேன்
ஆத்மாவை உணர்ந்து பார்த்துப் பாடுவேன்
அற்புத ஆனந்தம் வரப் பாடுவேன்
மனமெனும் மாயப்பொருள் ஒழியப் பாடுவேன்
                                                                                           (ஆன்மீக)

மனமும் பிரானும் இணையப் பாடுவேன்
பிரபஞ்சப் பொருள்கள் விளங்கி பாடுவேன்
பிரான் தூயசக்தி எனப் பாடுவேன்
அந்த சக்தியே சிவமெனப் பாடுவேன்
                                                                                        (ஆன்மீக)


அகிலமும் சிவன் என்று பாடுவேன்
உயிரெல்லாம் சிவமென தெரிந்து பாடுவேன்
நாளும் முக்காலமும் நீயெனப்பாடுவேன்
நானும் நீயும் இறைமயம் மெனப் பாடுவேன்
                                                                                            (ஆன்மீக)
 




Monday, May 14, 2012

குரு திருவடிக்கு ஒரு பாட்டு
குரு திருவடிக்கு ஒரு பாட்டு
உன் மனதில் நீயே உருவாக்கு
                                                              (குரு திருவடி)


அருள் ஒளிமுகமும் அகிலத்தை
அணைத்து இடும் கரமும்
ஓங்கிய ஞானம் புகழ்கின்ற
கண்ணும் உன்மனத்தினிலே தோன்றிடுமே
                                                                       (குரு திருவடி)


கர்மவினைகளை களைகின்ற விதத்தை
கற்றே தருவார் நேரிலே
சிறப்புடன் அவர் பாதம்
வணங்கியே ஏத்த ஒளியுள்ள
பாதையில் நடத்தி செல்வாரே
                                                    (குரு திருவடி)


தான தர்மங்களை செய்திடுவீர்
அதை மற்றையோர் அறியா
வழியினில் செய்வீர் வலக்கரம்
கொடுப்பது இடக்கரம் அறயா
என்றே குரு புகன்றாரே
                                               (குரு திருவடி)


பெயர் விளம்பரம் வேண்டவே
வேண்டாம் மேதினியில் அது
கிடைத்து விட்டால் ஞாலத்தில்
உன்னை புகழ்ந்திடுவார் பலர்
அதனால் உனக்கு தீங்குகளே.
                                                     (குரு திருவடி)

Saturday, May 12, 2012

திருமலை கோணேசர் பாடல்
திருமலை தன்னில் பரப்பிரம்மம்
மாதுமை அம்பாள் கோணேசா
அழகிய கடலே இருப்பிடமாம்
குன்றுகள் அங்கே இருப்பவையாம்

ஞானசம்மந்தர் பாடி வைத்தாரே
நான்நிலம் அதனால் வாழ்ந்ததே
சீலமிகு அந்த ஆலயமே
கடலுக்குள் புகுந்து கொண்டதுவே

மக்கள் மனதில் கவலை உடன்
காத்தே கிடந்தார் தரிசனத்தை
பின்னே வந்த குளக்கோட்டன்
இறைவன் ஆலயம் எடுத்தானே

மக்கள் வளமொடு வாழ்ந்தாரே
ஆலயம் தன்னில் வணங்கினரே
கந்தளாய் குளத்தை கட்டினனே
பூதங்களை காவல் வைத்தானே

பூவொன்று பழமொன்று வெத்திலையோடு
காவல் இருந்திட வேண்டுமென்றான்
அவையும் அதனை ஏற்றேயங்கு
காவல் இருந்து வந்தனவே

கந்தளாய் வயலும் விளைந்ததுவே
திருவிழா சிறப்புற நடந்ததுவே
மக்கள் மகிழ்ச்சி பொங்கிடவே
நாடு சீர்பெற்று எழுந்ததுவே

போத்துக்கேயர் இங்கு வந்தனரே
ஆலயம் முற்றாய் இடித்தனரே
கோட்டையை அங்கே கட்டினரே
ஆட்சியை பிடித்து வைத்தனரே

டச்சுக்காரர் இங்கு வந்தனரே
போர்த்துக்கேயர் தன்னை விரட்டினரே
ஆட்சியை தம்மிடம் வைத்தனரே
மக்கள் ஆலயம் போகா தவித்தனரே

பிரஞ்சுக்காரர் இங்கு வந்தனரே
ஒருநாள் ஆட்சி நடத்தினரே
பிரித்தானியரின் வருகையின் பின்
திருமலை அவர்வசம் போனதுவே

பிரித்தானியர் இங்கு வந்ததினால்
திருமலை தன்னை மீட்டதினால்
ஆலயம் போகா இருந்த மக்கள்
ஆலய தரிசனம் செய்தனரே

கோட்டை வாசல் கல்தன்னில்
கதையும் உண்டு கேளுங்கள்
பரம்பரை மக்கள் வாசித்த
கல்லும் சொல்லும் கதையென்ன?

"முன்னே குளக்கோட்டன் மூட்டும்
திருபணியை பின்னே பறங்கி பிடிப்பானே
பூனைககண் புகைக்கண் புலிக்கண்
பிடித்த பின் தானே வடுவாய் விடும்" 

நாட்டுக்கு சுதந்திரம் வந்ததுவே
நாடியே மக்கள் வழிபட்டார்
பாடியே பக்தியாய் துதித்தனரே
துதித்து மகிழ்ந்து வந்தனரே

பின்னர் பலரும் சிந்தித்தே
ஆலயம் தன்னை வடிவமைத்தார்
பக்குவ பூசைகள் திருவிழாக்கள்
முறையே நடைபெற செய்தனரே

கோணேசர் எங்கள் கோணேசர்
மாதுமை அம்பாள் கோணேசர்
நாடியே வந்து வணங்கியே
நற்கதி பெற்று உய்திடுவோம்.

Friday, May 11, 2012

சரஸ்வதி பா
பாதமலர் பணிந்திடுவோம்
பாக்கியமென நினைத்தே
பாதமலர் பணிந்திடுவோம்
ஞாலத்தில் கல்வியை
தந்திடும் தாயே
ஞானத்தில் மோனத்தை
தந்திடுவாய் வாணியே
கருத்தின் இசைவிலே
களித்திடு தேவியே
பாதமலர் பணிந்திடுவோம்



வாணி சரஸ்வதி
பார்கவி பாரதி
என்றே பலரும்
உனை ஏத்துவார்
தேன் சுவையாக
கவிதை மழை
பொழிந்திட அருள்வாய்
ஞாலமும் விளங்க
திவ்விய சௌந்தரியே
பாதமலர் பணிந்திடுவோம்


பார்கவி தாயே
பணிவுடன் ஏத்துகிறேன்
கற்றோர் தம்மை
மதிக்கும் உலகிலே
கற்றவராய் நாம் வலம்
வர செய்திட வேண்டும்
உள்ளத்து உண்மையினை
உன்னிடம் உரைத்தேன்
உயர்வினை தந்தருள்வாய்
பாதமலர் பணிந்திடுவோம்

ஜெகம் எல்லாம்
உன் ஆட்சியே
அம்மா இந்த
ஜெகத்தினிலும வாழ்கிறாயே
திருவுடை செல்வியே
அமரரின் தேவியே
அன்புடன் வணங்குகின்றோம்
உன் அருளினை
எமக்கு தந்தருள்வாய்
பாதமலர் பணிந்திடுவோம்

Thursday, May 10, 2012

நடராஜர் துதி
சிதம்பரம் தனிலே இருந்தாயே
சிதம்பரம் தனையே நினைத்தேனே
கண்ணீர் அருவியாய் ஓடிடவே
நாடியே வந்து சேர்ந்தேனே

அமுதென கனியை கண்டேனே
ஆனந்த பரவசம் கொண்டேனே
ஆலயம் தன்னை சுற்றுகையில்
அற்புத சிலம்பொலி கேட்டினும்


துருவியே பார்த்து சொல்லிடனும்
செயலினை செய்து தருவாயே
துயரினை களைந்து இன்புறவே
துரிதமாய் எனக்கு செய்வாயே


மலரின் நறுமணம் போன்றவரே
மாயையில் இருந்து மீண்டிலனே
தவித்திடும் நெஞ்சின் புளுக்கமதை
தணித்திட நீயும் வரவேண்டும்


சுகமென நானே இருந்ததெல்லாம்
வெறுமையாய் எனக்கு தோன்றிடுதே
அழுதிடும் உணர்வின் கனவெல்லாம்
அடைந்திட வேணும் நொடியினிலே


இகபர சுகமது தந்தருளே
உணர்வினில் நானும் கரைந்தேனே
பழுத்திட்ட பழம்போல்மயங்கி நெஞ்சமதை
ஆக்கியே பக்தியை தந்திடுவாய்


ஜெகமெல்லாம் உனை வேண்டிடுதே
ஜெகதினில் மயங்கி நின்றேனே
துயருறு நிலையை களைந்தே
பாங்குடன் என்னையே தூக்கிடுவாய்


இனியும் தாமதம் கொண்டாலே
மீண்டொரு ஜென்மம் எடுத்திடனும்
குறைகளை களைந்து பாருமையா
கருணையோ டென்னை காரும


பிறவியில் பட்ட துயரங்கள்
புரிந்தே வந்து அருளை தருவாயே
சுலமிலன் சங்கரன் என்பதற்கு
தத்துவம் என்ன பதில் தருக.

Wednesday, May 9, 2012

சிவ நாமம்

சாம்பசிவா சிவ சதாசிவாசதாசிவா சிவ சாம்பசிவா
சாம்பசிவா சிவ சாம்பசிவா
சதாசிவா சிவ  சதாசிவா 

கைலயங்கிரியில் சதாசிவா
கருணை மூர்த்தியாம் சாம்பசிவா
தன்னிகர் இல்லான்
சதாசிவா
தனிப்பெருங் கருணை சாம்பசிவா  

சதாசிவா சிவ சாம்பசிவா
சாம்பசிவா சிவ சதாசிவா


ஐந்தெழுத்தோதி சாம்பசிவா
அருளினை பெருவோம் சதாசிவா
முந்து சிவனாம் சாம்பசிவா
முன் வினை களைவான் சதாசிவா


சாம்பசிவா சிவ சதாசிவா
சதாசிவா சிவ சாம்பசிவா


அம்பலத்தாடுவான் சதாசிவா
அருள்ளொளியினை தருவான் சாம்பசிவா
அனர்த்தங்கள் தீர்ப்பான் சதாசிவா
அபயம் அளிப்பான் சாம்பசிவா

 சாம்பசிவா சிவ சதாசிவா
சதாசிவா சிவ சாம்பசிவா


முக்கண் உடையோன் சதாசிவா
முப்பிணி தீர்ப்பான் சாம்பசிவா
உள்ளத்தை உயர்த்துவான் சதாசிவா
உரிமையைத் தருவான் சாம்பசிவா


சாம்பசிவா சிவ சதாசிவா
சதாசிவா சிவ சாம்பசிவா.



 

Tuesday, May 8, 2012

கஜபதி துதி
சித்தி விநாயகனே கஜமுகனே
உன் திருவடி துணையே ஐங்கரனே
                                                                            சித்தி விநாயகனே



நித்தமும் தொழுதேன் கணேசா
தீவினை தீர்த்திடு விநாயகனே
                                                                     சித்தி விநாயகனே



மெத்தவும் வாழ்வினில் வருந்தினேன்
திருவருள் துனண என்று வந்தேனே
என்னை அணைத்து அருள் புரிந்தாய்
கேட்டது கேட்டபடி தந்தாயே
                                                                             சித்தி விநாயகனே



புத்தியில் வைத்து புனிதனானேன்
புண்ணியா உனை சேவித்தேனே
சக்தியின்பாலா தயை தந்தருள்வாய்
என்றுமே என்னுடன் இருந்திடுவாய்
                                                                               சித்தி விநாயகனே



பக்தியில் உனை வணங்குகின்றேன்
பாலகா வந்தென்னை ரட்சிப்பாயே
உத்தமா உனை மறந்திடாமல்
உள்ளத்தில் நின்று காத்திடுவாய்
                                                                               சித்தி விநாயகனே



சொற்பதம் கடந்து வேண்டுகின்றேன்
விரும்பியே பிள்ளைகட்கு அருள்புரிவாய்
அற்புதா ஜோதியை கணபதியே
அனைத்துலகத்திற்கும்அருளது தருவாய்
                                                                                    சித்தி விநாயகனே

Monday, May 7, 2012

இசை மேதை வனப்பு
இசையில் ஆதவன் இசை மழையே
பாடக் கேட்குதே தேன் மழையாய்
கொடுக்கின்ற வரம் கொண்டு வந்த
கர்ணன் கொடுப்பது போல் பொழிந்திடுதே

பரிதி வாணவன் ஒளியினை போல்
மனமும் ஒளியினை பெற்றது இங்கே
சுருதி சேர்த்து இங்கே பாடுவதாலே
கலை ஞானமும் தவழ்ந்து வீசிடுதே

கருதலாம் வினை தீர்ப்பார் இங்கே
அவர் திருநாம பாட்டதை கேட்டு
விதியினால் மயங்கிடவில்லை உயிர்கள்
இசையினால் உயிர் மயங்கி நின்றதுவே

மதியினால் மாந்தர் தம் வினையினை
நீக்கி இறையிடம் வேண்டி நின்றனரே
அழகிலா அவர் புகழ் பாடுகின்றார்
உன் சேவடி துனையே காத்தருள்வீர்

தும்புறு நாரதர் பாடினார் வானில்
அன்று வானகம் கானத்தில் மயங்கியதே
இன்று வந்திடும் மேதைகள் பாடுவதாலே
இந்த அகிலமும் பூரித்து போனதுவே

சப்தசுர ஞானம் வானத்தில் எட்டிடவே
இசை ஞானியின் பாட்டு ஓலித்ததுவே
அந்த பாட்டின் ஒலியின் இனிமையிலே
இந்த தேவரும் முனிவரும் மயங்கினரே

சிந்தனைக் கரிய சிவபெருமானுந் தான்
இதைக் கேட்டே மௌனம் ஆயினாரே
சங்கராபரணம் தனிப் பெரும் விருப்பம்
தாரணியில் அதை ராவணன் மீட்டினனே

அந்த இசையில் மயங்கிய சிவனால்
இலங்கை இராவணன் மீட்சி பெற்றானே
இந்த இசையைக் கேட்டே சிவனும்
எமக்கு என்ன வரத்தை கொடுப்பாரோ.

Saturday, May 5, 2012

ஆறுதல் அடைவீர்

கலங்கி நிற்கும் மக்களே
என்ன அங்கு பார்க்கிறீர்
நிலை குலைந்து போனதாலே
உருகி நின்று பார்ப்பதாலே
துயரினை நீக்கவே முடியுமா
உடைந்து போன உள்ளத்தை
உறுதி யாக்கி கொள்ளுமின்
இருக்கின்ற உயர் தன்னை
காத்து நீர் வாழுவீர்
நடந்து போன நிகழ்வுகளை
உம்மால் தடுத்திட முடியுமா
அதிர்ச்சியில் நீங்கி நீர்
மீண்டும் வாழ்வு வாழுவீர்
உமது உறவுகள் தொலையலாம்
உடைமைகள் தனை இழக்கலாம்
உண்மை நிலையை உணர்ந்திட்டு
நீர் மயங்கலாம் மக்களே
என்ன செய்ய போகிறீர்
புணர்ஜென்மம் எடுத்து உள்ளீர்

நிலைமை கண்டு அஞ்சற்க
வலிவு இல்லாத வாழ்வெல்லாம்
வீன் காலமாய் போய்விடும்
சீறும் புயலினால் அழிவதும்
கொடும் போரினால் அழிவதும்
கடும் தீயினால் அழிவதும்
அறிந்து கொண்ட தில்லையா
அன்பு நிறை மக்களே
உம் துயரினை களையுங்கள்
சொல்வது என்பது சுலபம்தான்
வாழ்வது என்பது கடினமே
என்ன செய்ய போகிறீர்
மக்கள் நீர் கூறுங்கள்
சாவின் மடிக்கு சென்று
நீரும் திரும்பி வந்தவர்
அல்லவோ மிக உன்னத
சிறப்பினை பெற்று நீர்
வாழ்கின்றீர் உம் கண்களை
கசக்கிடாது மனது தளர்ச்சி


அடைந்திடாது உம்மை தூக்கி
வையுங்கள் என்றும் ஆறுதல்
தந்திடும் கடவுள் தன்னை
நினையுங்கள் கடமையில் குதியுங்கள்
தேவை கண்டு இங்கு
இரங்கும் உள்ளம் பலவுண்டு
அவர்கள் தந்த அன்பினால்
ஆறுதல் தரும் சொற்களால்
உம்மை நீர் தேற்றுங்கள்.
நாளது பல சென்றிடின்
நலிந்தோர்கள் தான் தேறுவார்
அன்பு நிறைந்த மக்களே
உலகமது தோன்றியே வருகையில்
இயற்கை தரும் சீற்றங்கள்
கண்டு மக்கள் வந்தனரே
அத்தனை சீற்றமும் கண்டுதான்
மக்கள் வாழ்வை விட்டனரோ
உண்மை இது உணருங்கள்
செத்தவர் தம்மையே எண்ணியே
பிரார்த்தித்து நிஜத்துக்கு வாருங்கள்.

Thursday, May 3, 2012

இறையை உதவிக்கு அழைத்தல்

இக் கவிதை சுனாமி அலைகள் மக்களை தாக்கிய பின்னர் எழுதப்பட்டது.பாரதியார் காக்கை சிறகினில் கூட இறையை கண்டு பாடினார்.அந்த இறைவனை மக்கள் கலங்கி தவித்து வரும் வேளையில் துணைக்கு கூப்பிடுதலே ஒரே  வழி எனவே கவிதை மெட்டு பாரதியாரின் பாட்டு மெட்டிலே அமைந்து இருக்கிறது.

தோன்றும் உயிரில் எல்லாம் கிருஸ்ணபாலா
அகன்றிடாமல் இருக்கிறாயே கிருஸ்ணபாலா
அணுவுக்கு அணுவாக நீ கிருஸ்ணபாலா
அமர்ந்தே நீ இருக்கிறாயே கிருஸ்ணபாலா

பொங்கி வரும் கடல் அலையில் கிருஸ்ணபாலா
உன் புவியீர்ப்பு செல்லலையோ கிருஸ்ணபாலா
மக்கள் துயர் துன்பம் எல்லாம் கிருஸ்ணபாலா
மாநிலத்தின் ஆற்றிவிடேன் கிருஸ்ணபாலா

பெற்றோர் பிள்ளையை பிரிந்தார் கிருஸ்ணபாலா
பிரிவுத்துயர் ஆற்றிவிடு கிருஸ்ணபாலா
பெற்றோரை பிள்ளை பிரிந்தார் கிருஸ்ணபாலா
அன்னையாக வளர்த்து விடு கிருஸ்ணபாலா

உடமை தனை இழந்தார் கிருஸ்ணபாலா
அவர் உரிமைகளை கொடுத்தருளேன் கிருஸ்ணபாலா
நான் அத்தனையும் வேண்டுகிறேன் கிருஸ்ணபாலா
சோகம் நீக்கி வாழவையேன் கிருஸ்ணபாலா